விஸ்வாஸ் வித்யா 2025 மஹாவிஸ்வகர்மா விருது சௌ மா கல்வி நிறுவனங்களின் தலைவர் சௌமா ராஜரத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டது

பொள்ளாச்சி விஸ்வாஸ் சார்பாக கடந்த 5 அக்டோபர் 2025 அன்று 22 ஆம் ஆண்டு விஸ்வாஸ் வித்யா & மஹா விஸ்வகர்மா விருது வழங்கும் விழா பொள்ளாச்சி எல்ஐஜி காலனி மகாலிங்கபுரத்தில் உள்ள விஸ்வகர்மா திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் சென்னை இந்தியன் ஆர்த்தோகேர் சர்ஜிக்கல்ஸ் நிறுவனர் தலைவர் மற்றும் சிறந்த ஆன்மீகவாதி பிரம்மஸ்ரீ ரெங்கநாதன் நடராஜன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு “மஹா விஸ்வகர்மா” விருதினை வழங்கி மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும்,கல்வி உதவித்தொகைகளும் அளித்து சிறப்புரை வழங்கினார். முன்னதாக விஸ்வாஸ் மகளிர் மங்கல விளக்கேற்றி வைக்க விஸ்வாஸ் ம.தொடர்பு அலுவலர் திரு. அன்பழகன் பாடிய இறைவணக்கத்துடன் விழா துவங்கியது. விஸ்வாஸ் திட்ட அலுவலர் திரு.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரை நல்கிட சிறப்பு விருந்தினர்களுக்கு விஸ்வாஸ் உறுப்பினர்களால் சிறப்பிக்கப்பட்டது.

விஸ்வாஸ் அமைப்பின் 22 ஆண்டுகால வளர்ச்சியையும், எதிர்வரும் செயல்பாடுகளை குறித்தும் விஸ்வாஸ் அமைப்பின் முன்மாதிரி தலைவர் திரு. ஆறு. தர்மபூபதி அவர்கள் தனது தலைமையுரையில் அழகுற எடுத்துரைத்தார். மணப்பாறை சௌமா கல்வி நிறுவனத்தலைவர் பிரம்மஸ்ரீ அரிமா சௌமா.ராஜரத்தினம் அவர்கள் ஆற்றி வரும் கல்விச் சேவையை பாராட்டி “மஹாவிஸ்வகர்மா” விருது வழங்கப்பட்டது. மேலும் சிறந்த சமூக சேவை ஆற்றி வரும் விஸ்வகர்மா அமைப்பான கோவை விஸ்வகர்மா பண்பாட்டு கழகத்திற்கு விஸ்வகர்ம சேவா பாரதி எனும் சிறப்பு மிகு விருது மற்றும் தன்னலம் கருதாமல் கல்விச்சேவை ஆற்றும் விஸ்வகர்மா ஆசிரியருக்கு இவ்வாண்டு முதல் விஸ்வகர்ம உபாத்யாய பாரதி எனும் விருது பொள்ளாச்சி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் திருமதி தனுசியா ஆகியோருக்கு விழாவின் முதன்மை விருந்தினர் பிரம்மஸ்ரீ ரெங்கநாதன் நடராஜன் அவர்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மஹாவிஸ்வகர்மா விருது பெற்ற பிரம்மஸ்ரீ அரிமா சௌமா. ராஜரத்தினம் அவர்கள் விஸ்வகர்மா விருதின் சிறப்பையும், மாணவர்கள் பெற்றோர்களை எவ்வாறு போற்றி பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியும் இன்றைய சூழலில் கல்வி, தொழில், அறம் ஆகியவற்றின் அவசியத்தை தனது ஏற்புரையில் தெளிவாகக் கூறியது மிகச்சிறப்பாகும்.

கோவை தமிழ் மதுரம் இலக்கிய அமைப்பின் பொதுச் செயலர் பாரதி சுடர் பிரம்மஸ்ரீமதி மஹேஸ்வரி சற்குரு அவர்கள் சுய ஒழுக்கம், கல்வி மேம்பாடு, பெற்றோரை மதித்தல், கலாச்சாரம் & பண்பாடு ஆகியன பின்பற்றுதல் போன்ற கருத்துக்களையும் தனது திறனுரையில் வழங்கியது மாணவர்களுக்கு மிகவும் பயனாக அமைந்தது .

பொள்ளாச்சி விஸ்வப்பிரம்ம சமூக கல்யாண மண்டப ஸ்தாபன அறக்கட்டளையின் உயர்மட்டக்குழு உறுப்பினராகிய திரு. ஏ.டி. கபீர்தாஸ் அவர்கள் தனது வாழ்த்துரை வழங்க்கினார்கள்.

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் விஸ்வாஸ் அமைப்பிற்கு விண்ணப்பித்த அளவில் பத்தாம் வகுப்பு & +2 தேறியவர்களில் முதல் மூன்று இடத்திற்கான பரிசுகளும் சிறப்பு மதிப்பெண் பெற்றமைக்காக ஊக்கப்பரிசுகளும், தகுதி அடிப்படையில் மாணவர்கள் மேற்படிப்பு பயில உதவித்தொகைகளும் (சுமார் மூன்று லட்சம் ) வழங்கப்பட்டது. இவ்வாண்டு 83 மாணவ மாணவிகள் பயனடைந்தனர். நிறைவாக விஸ்வாஸ் செயலர் திரு.மதுராந்தகன் அவர்கள் நன்றி நவில பின் நாட்டுப்பண் இசைக்க விழா தேசிய உணர்வோடு இனிதே நிறைவுற்றது. அனைவருக்கும் மதிய விருந்து அன்புடன் பரிமாறப்பட்டது.

விழாவில் உள்ளூர் & சென்னை, திருப்பூர் கரூர், திண்டுக்கல், திருச்சி, அரக்கோணம் உள்ளிட்ட பல வெளியூர் சமூக அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஸ்வாஸ் நிர்வாக குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

-சி எஸ் திருனாவுக்கரசு பொது செயலாளர்

Be the first to comment on "விஸ்வாஸ் வித்யா 2025 மஹாவிஸ்வகர்மா விருது சௌ மா கல்வி நிறுவனங்களின் தலைவர் சௌமா ராஜரத்தினம் அவர்களுக்கு வழங்கப்பட்டது"

Leave a comment

Your email address will not be published.


*