தியாக தீபம் (பி எம் எஸ்) பொள்ளாச்சி எம் சுப்ரமணியம்

இந்திய விடுதலை இயக்கம்‌ வேகம்‌ பெற்றுக்‌ கொண்டிருந்த காலம்‌.!

ஆங்கிலேயரை எதிர்த்துத்‌ தொடர்‌ போராட்டங்கள்‌ நடந்து கொண்டிருந்த அதே வேளையில்‌ சாதி வெறியை எதிர்த்து, தீண்டாமையை எதிர்த்து மக்களிடையே காங்கிரஸ்‌ இயக்கம்‌ பிரச்சாரத்தை தொடங்கியிருந்தது. ஒரு கட்டத்தில்‌, நாடு முழுவதும்‌ “சமபந்தி விருந்து நடத்த வேண்டும்‌! எனக்‌ காங்கிரஸ்‌ கட்சி கோரிக்கை விடுத்தது. அப்போது பி.எம்‌.எஸ்‌. அவர்களுக்கு வயது 16.

விடுதலை வேட்கையும்‌ சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில்‌ ஈடுபாடும்‌ அவர்‌ உள்ளத்தில்‌ வேரூன்றத்‌ தொடங்கியது. இதே உணர்வுடைய, திரு. என்‌. வீரண்ணன்‌, (பின்னாளில்‌ கட்டிடத்‌ தொழிலாளர்‌ சங்கத்தின்‌ தலைவராய்‌ இருந்து புகழ்பெற்றவர்‌) திரு.வேலுசாமி (சிங்கர் மிஷின்‌ வேலுசாமிக் கவுண்டர்‌) அகியோர்‌ அவருக்கு நெருங்கிய. நண்பர்களாய்‌ இருந்தனர்‌. சமபந்தி விருந்து ஆழியாற்றின்‌ கரையில்‌ அம்பராம்‌ பாளையத்தில்‌ நடைபெற்றது. இந்த விருந்துக்குத்‌ தலைமைப்‌ பொறுப்பை ஏற்றிருந்தவர்‌  செல்வந்தர் காங்கிரஸ் தலைவர்  திரு.சென்னப்ப கவுடர்‌. சமபந்தி விருந்தில் கலந்து கொண்டு பி எம் எஸ் வீட்டிற்கு வந்த போது ஒரு பிரளயம்  காத்திருந்தது  அவர் தந்தை கடும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார். ”நில்லடா, வீட்டிற்குள்  நுழைந்தால் கொலை விழும்! சக்கிலி பறையர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு வந்தவனுக்கு இந்த விட்டில் இடமில்லை. வெளியே போடா! என்று விரட்டினார். இப்படி வீட்டை விட்டு விரட்டப்பட்ட  பி எம் எஸ் சி நண்பர்கள் வீட்டிலும் ஒரிரு நாள் தங்கினார். நீண்ட நாட்கள் இப்படி நண்பர்கள் வீட்டில்  தங்க்க முடியாது என்பதை உணர்ந்த பி எம் எஸ் பொள்ளாச்சியை விட்டு வெளியேறி நடந்தே போத்தனுர் வந்தடைந்தார். மூன்று நாட்களில் ரயில்வே நிலையத்தில் ஒரு ஆங்கிலேய அதிகாரியை சந்திக்க நேர்ந்தது. தனது பரம்பரை தொழிலான ஆச்சாரி தொழில் அவருக்கு கைகொடுத்தது. அதனால் அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. படிப்படியாக ரயில் பையர்மேன் ஆனார்.  இங்கு கம்யூ இயக்க தோழர்களோடு நட்பு ஏற்பட்டு, அதன்‌ கொள்‌கையால் ஈர்க்கப்பட்டு தன்னை இடது சாரிஇயக்கத்தில்‌ இணைத்துக் கொண்டார்‌. பின்னர்‌ ரயில்வே தொழிலளார்களை ஒருங்கிணைத்து ரயில்வே தொழிலாளர் சங்கத்தினை தோற்றுவித்து தமிழகம் முழுக்க அதில் ரயில்வே தொழிலாளர்களை சேர்த்தார்.

 

இச்சூழலில்‌ 1946ஆம்‌ ஆண்டு தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்களின்‌ போராட்டம்‌ நடைபெற்‌றது. இப்போராட்டத்தை முன்‌னின்று நடத்தியவர்களில்‌ முதன்மையானவர்களில்‌ தோழர்‌ பி.எம்‌.எஸ் ஒருவராவார்‌. மேலும்‌, இப்போராட்டத்தின் போது தோழர்‌ எம்‌. கல்யாணசுந்தரம்‌,  உமாநாத்‌ பி.எம்‌.எஸ்‌. போன்றவர்கள் அன்றைய காவல்துறை அதிகாரி ஹரிசான்‌ என்பவரால்‌ கடுமையாக தாக்கப்பட்டதுடன்‌, புதுக்‌கோட்டை சிறையிலும்‌ அடைக்‌கப்பட்டனர்‌. அவர்கள்‌ மீது சதிவழக்கு போடபட்டது. இது பின்னாளில்‌ திருச்சி சதி வழக்கு என அழைக்கப்பட்டது. இதில்‌ முன்னூறுக்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள்‌ மீது சதி வழக்கு பதியப்‌பட்டுள்ளது. இந்த வழக்கு உடனடியாக நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லா விட்டால்‌ அனைவருக்கும்‌ வேலை பறி போகும்‌ நிலை ஏற்பட்டது. இந்‌நிலையில்‌ உடனே தனது வேலையை ராஜினாமா செய்தார். அதன் மூலம் தனது சேம நல நிதி ரூ.13 ஆயிரத்தை கொடுத்து வழக்கினை நடத்தி அதில்‌ வெற்றி கண்டார்‌. இதன்‌ மூலம்‌ திருச்‌சி சதி வழக்கு உடைந்தது, தொழிலாளர்கள்‌ வேலை காக்கப்பட்டது.

இதன் பின்‌, 1947 ஆம்‌ ஆண்டு இந்தியா -பாகிஸ்தான் ‌ பிரச்சனையில்‌ ஏற்பட்ட மதக் கலவரங்களின்  போது பாகிஸ்தானலிருந்து இந்தியா வர விரும்பும் ஹிந்துக்களை இந்தியா கொணர சிறப்பு ரயில் பல அச்சுறுத்தல்களின் இடையில் இயக்கப்பட்டது. அந்த ரயிலை இயக்க பல ரயில் ஓட்டுனர்கள் பயந்து வர மறுத்தபோது இந்திய அரசு தேசபக்த ஓட்டுனர்கள் ரயிலை ஓட்ட முன்வர வேண்டுமென்று அரசு அறிவித்த போது, அந்த வேண்டுகோளை ஏற்று, துணிந்து பாகிஸ்தானுக்கு ரயிலை ஓட்டி அங்கிருந்த இந்திய சீக்கியர்களை ஏற்றி வந்த சில ரயில் ஓட்டுனர்களில் பி எம் எஸ் முதன்மையானவராக இருந்தார்.

இத்தகைய வீரமிக்க தோழர் பி எம் எஸ்.     1985ஆம்‌ ஆண்டு பிப்ரவரி 15ல்‌ 76 வது வயதில்‌ காலமானார்.

தியாக தீபம் என்ற இவரைப்பற்றிய நூலில்,

“பழுத்த தேச பக்தரும், களங்கள் பல கண்ட அரசியல்வாதியும் தொழிற்சங்கங்களை தோளிற் சுமந்தவரும்  பி எம் எஸ் என்று மூன்றெழுத்துக்களில்  மதிப்பொடும் மரியாதையுமாக அழைக்கப் பட்டவருமான திரு பி எம் சுப்ரமணியம் என்ற அந்த பெரியவர் பொள்ளாச்சி இந்திய சோவியத் கலாச்சார கழகம் என்ற அமைப்பை துவக்கி அதன் செயலாளராகவும் தன்னை முழுமையாக  ஈடுபடுத்திக் கொண்டவர் !

பத்மஸ்ரீ கவிஞர் சிற்பியின் மௌன மயக்கங்கள் என்ற காவியத்தில் ஒரு பாத்திரமாக வரும் அந்த தோழர் நம் அன்பிற்கும் பாசத்திற்க்கும் உரியவரான நிஜமான மனிதர்.”

பத்மஸ்ரீ விருது பெற்ற கவிஞர் சிற்பி அவர்களின் இரங்கற்பா!

தூய்மை என்றாலும் வாய்மை என்றாலும்

சுடர்விடும் உருவம் பி.எம்.எஸ்.

தாய்மை கனிந்திட்ட உள்ளம் – அதில்

ததும்பி வழிந்திடும் சத்திய வெள்ளம்

தீமை அழிக்கின்ற நெருப்பு – உயிர்

தியாகமும் தீரமும் இவர்கை இருப்பு

தொழிலாளர் இயக்கங்கள் தம்மை – இவர்

தோளேந்திக் காத்தது சரித்திர உண்மை!

பழிகார வெஞ்சிறைக்கூடம். அதில்

பட்டினிப் போராட்டம் இவர் கற்ற பாடம்.

பொதுவுடமை பூத்த நெஞ்சம் – என்றும்

பொது வாழ்க்கையே இவர் மஞ்சம்

நதிபோல நலம்செய்ய ஓடி – இந்த

நாயகன் ஆற்றிய நற்பணி கோடி.

-கவிஞர் சிற்பி