தமிழ் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்ட உயர் தனிச் செம்மொழி. இத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் மொழியின் இணையான கூறுகளாக இயற் தமிழ், இசைத் தமிழ் மற்றும் நாடகத்தமிழ் ஆகிய மூன்றும் அடையாளப் படுத்தப்படுகிறது இதில் நாடகத் தமிழில் மட்டுமே இயலும் இசையும் இணைந்து காணப்படுகிறது. நிகழ்த்து கலை வடிவமான நாடகக் கலை பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நாடகக் குழுவினரால் (சபா) வளர்க்கப்பட்டு வந்தது தமிழகத்தில் நாடகக் கலையை வளர்ப்பதில் பெரும்பங்காற்றியவர்கள் நாடக நடிகர்களே. திரைப்படங்களின் (1931) வருகைக்குப் பின் பல நாடக நடிகர்கள் திரைத்துறையை நோக்கிப் பயணப்படத் தொடங்கினர். அவ்வாறு திரைத்துறைக்கு சென்றவர்களில் சிலர் தன்னுடைய தனித்துவம் வாய்ந்த நடிப்புத் திறமையினால் மக்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றனர் அதில் விஸ்வகர்மா இனத்தை சார்ந்த பிரம்ம்ஸ்ரீ S.V. சுப்பையா அவர்களும் ஒருவர். 1946 முதல் 1980 முடிய உள்ள தமிழ் திரையுலக காலகட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் இருந்த குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் அமரர். S.V. சுப்பையா அவர்கள்.